Kerala: "மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க" – பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார்.

பின்னர் செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஊடகவியலாளரான அவருக்கு 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆரன்முளா சட்டசபை தொகுதியில் போட்டியிட சி.பி.எம் கட்சி திடீரென வாய்ப்பு கொடுத்தது.

ஊடகவியலாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிகழ்வு அப்போது பேசுபொருளானது. 2016 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில் வீணா ஜார்ஜின் கணவர் ஜார்ஜ் ஜோசப் ஆர்த்தடாக்ஸ் சபையின் செயலாளராக இருந்தார்.

சபை வாக்குகள் பெரிய அளவில் கிடைத்ததுதான் வீணா ஜார்ஜின் வெற்றிக்குக் காரணம் எனப் பேசப்பட்டது. எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வீணா ஜார்ஜ். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் 2021 சட்டசபை தேர்தலில் ஆரன்முளா தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.பி.எம் வாய்ப்பு வழங்கியது. 

இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்ற வீணா ஜார்ஜ் இரண்டாம் பினராயி சர்க்காரில் சுகாதார அமைச்சராக ஆனார்.

சிகிச்சைக்குப்பின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ்
சிகிச்சைக்குப்பின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா-வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் பதவியில் இருக்கும் வீணா ஜார்ஜ் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வீணா ஜார்ஜிக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்க வேண்டாம் என அவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் சி.பி.எம் மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

அவரின் கோரிக்கை மாவட்டக் குழுவின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்தனம்திட்டா மாவட்ட குழுக் கூட்டத்தில், ஆரன்முளா தொகுதியில் வீணா ஜார்ஜும், கோன்னியில் ஜனீஷ்குமாரும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீணா ஜார்ஜ் போட்டியிட விரும்பவில்லை என நேரடியாகத் தெரிவித்தால் மட்டுமே வேறு நபரைப் பரிந்துரைக்கலாம் என மாவட்ட குழு தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீணா ஜார்ஜுக்கு சீட் வழங்கவேண்டாம் எனக் கோரிக்கை வைத்தீர்களா என்ற கேள்விக்கு ஜார்ஜ் ஜோசப் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் பிரவேசத்தால் மனைவியால் குடும்பத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதால் அவரது கணவர் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

சில நாட்களுக்கு முன் கண்ணூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு போராட்டத்தைத் தொடர்ந்து கழுத்தில் காயமடைந்து ஓய்வில் இருந்தார் வீணா ஜார்ஜ். உடல்நிலை சரியான பின்னர் அவர் கடந்த 3-ம் தேதி பத்தனம்திட்டாவில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறாமல் சென்றுவிட்டார். அதே சமயம் தேர்தல் பிரசாரத்துக்கு என நியமிக்கப்பட்ட குழுவினர் வீணா ஜார்ஜுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் அவர் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.