இயக்குநர் கே.பி.ஜெகன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புதிய கீதை’.
சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ரீவைண்ட் தொடருக்கு அவரைப் பேட்டி கண்டோம்.
திரைப்படம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பேட்டியில் இயக்குநர் கே.பி.ஜெகன், “முதலில் படத்திற்கு ‘கீதை’ என்கிற தலைப்பைதான் வைத்திருந்தோம்.
ஆனால், நான் படத்திற்கு ரொம்பவே ஆசைப்பட்டு வைத்த டைட்டில் ‘சாரதி’. கதாபாத்திரத்தின் பெயரையே அதற்கு வைத்துவிடலாம் என எண்ணினேன். அந்த பெயரின் சவுண்டும் எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால், அந்த டைட்டில் ஆக்ஷன் படத்திற்கு வைப்பது போல இருக்கிறது எனக் கூறிவிட்டார்கள். பிறகு படத்தின் தயாரிப்பாளரே, படத்திற்கு ‘கீதை’ என தலைப்பு வைக்கலாம் எனப் பரிந்துரைத்தார்.
அவர் ஆன்மிகம் மீது மிகுந்த பற்றுக் கொண்டவரும்கூட. அப்படி படத்திற்கு டைட்டில் ‘கீதை’ என தலைப்பு வைத்தோம். படத்தின் ரிலீஸ் நெருங்கும் வரை, இந்தத் தலைப்புதான் இருந்தது.
ஆனால், ரிலீஸுக்கு 15 நாள்களுக்கு முன்பு சில இந்து அமைப்புகள் சினிமா படத்திற்கு ஒரு புனித நூலின் பெயரை வைப்பதாக என கண்டனம் தெரிவித்தார்கள்.

படத்திலும் நாங்கள் பல விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். ஆனால், அதையெல்லாம் அவர்களுக்கு போட்டுக் காண்பித்து விளக்குவதற்கும் எங்களுக்கு நேரமில்லை.
உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மீண்டும் தயாரிப்பாளரேதான் ‘புதிய கீதை’ என்கிற தலைப்பைச் சொன்னார்.
`இளைய தளபதி விஜய் நடிக்கும், கீதை’ என்றிருந்தது. விஜய் சார், கிறிஸ்துவர் என்பதால் அந்த நேரத்தில், அவர்கள் அந்தப் பெயரை வைக்க விடவில்லை.” எனக் கூறினார்.