ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில், செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு மீதும், தலைவர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார். அந்த விரக்தியின் காரணமாகவே அவர் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பேசி வருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எப்போதுமே தமிழ்நாட்டில் போட்டி என்பது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையேதான். ஆனால், தற்போது பிஜேபி நேரடியாக வர முடியாமல் அ.தி.மு.க-வின் முகமூடியைப் போட்டுக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது. இதுதான் உண்மை நிலை.

நான் எங்குச் சென்றாலும் காலையில் நடப்பது எனது வழக்கம். இப்போது தேர்தல் காலம் என்பதால், மக்கள் என்னை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்துகிறார்கள். ‘உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு’ என்று மக்கள் உறுதியளிப்பது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. அதனால் வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே நடக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் போட்டி தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும்தான் என்று கூறி வருவது குறித்த கேட்டதற்கு, “இதற்கு No Comments” என்று முதல்வர் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அதேபோல், ஜன நாயகம்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது, அந்தப் புகார்களை நான் படிக்கவில்லை. இதுபோன்ற விவகாரங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.