விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கர’.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ‘கர’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “ ‘கர’ படத்தைப் பார்த்ததேன்.

சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது.
நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது.
அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும்.. கர கொண்டாடப்படும்..” என படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் ஒடிசாவில் ஜித்து முண்டா என்ற நபரின் சகோதரி இறந்துவிட்ட நிலையில், அவருடைய வங்கி கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க பலமுறை வங்கிக்கு அலைந்துள்ளார்.

அங்குள்ள வங்கி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் கொண்டுவர சொல்லாமல், கணக்கில் வைத்திருப்பவர்கள் நேரில் வரவேண்டும் என அலட்சிய பதிலை சொல்லியிருக்கின்றனர்.
வங்கி ஊழியர்களின் பதிலால் மனமுடைந்த ஜித்து முண்டா, இறந்து புதைக்கப்பட்ட சகோதரியின் சடலத்தை தோண்டி எடுத்து வங்கிக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.