ஏரியா சபை வார்டு கமிட்டிகள் அமைப்பு: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பாராட்டு

சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ந்தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம்.

12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

அதேசமயம், இந்த நடை முறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்… போரில் காயம் அடைந்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் நேரில் ஆறுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.