விழுப்புரம் மாவட்டத்தில் 20 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார்.
சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் சாய் கிருஷ்ணன். இவர் நேற்று காலை தனது மினி லாரியில் மரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலையில், மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மினிலாரியில் சிக்கி படுகாயமடைந்த ஓட்டுனரை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.