ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து பரிசீலியுங்கள்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு  மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு புதுச்சேரி பிளாஸ்டிக் பை (நெகிழி) உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை   நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி. டி. ஆஷா  அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் தான் அடைக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்றும், உடலுக்கு தீங்கு என தெரிந்தும், அதில் வரும் உணவுப்பொருட்களை உண்கிறோம் என்றும் கவலை தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாதங்களுக்கு பிறகு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்கப்படுவதை ஏன் தடை செய்யக்கூடாது என கேள்வி  எழுப்பிய நீதிபதிகள், அமுல், நெஸ்லே ஆகியவை நிறுவனங்கள் டெட்ரா பேக்குகளில் பொருட்களை வழங்குவது போல, ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக், உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக இருப்பதாகவும் (தடை செய்ததே அரசுதானே) , அதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை அவ்வப்போது ஆய்வு செய்து தடுப்பதாவும், கடந்த 20 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 22,930 கடைகள் சோதனை செய்யப்பட்டு, அவற்றில் 8,550 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, 514 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 28.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், சுற்றுச்சூழல் கண்காட்சியை அடுத்த மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நீதிபதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடும்போதுதான், இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியதுடன், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கும், சமூகத்திற்கு உள்ளதாக குறிப்பிட்டனர். மேலும்,  ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி அறிவுறுத்தியதுடன், இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தண்ணீர் விநியோகிக்கும் வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29க்கு தள்ளி வைத்தனர்.

சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு ஆவின் பால் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.