அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு… சிக்கியவை என்னென்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் எஸ்.பி.வேலுமணி சொந்தமான 31 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

‘இந்த சோதனையில் எந்த பொருளும், ஆவணங்களும் சிக்கவில்லை. வெறும் 7,500 ரூபாய்தான் கண்டெடுக்கப்பட்டது. அதனையும் போலீசார் தன்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்’ என்று எஸ்பி வேலுமணி கெத்தாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கண்டறியப்பட்ட ரொக்கப் பணம், தங்க நகைகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்பு்த் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 32.98 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்துடன் 1,228 கிராம் தங்க நகைகள், 9.48 கிலோகிராம் வெள்ளிப் பொருட்கள், 316 ஆவணங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சென்னை, சேலம், மதுரை, தேனி ஆகிய நகரங்களில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

இந்த அதிரடி ரெய்டில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கம், 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோகிராம் தங்க நகைகள், 120 ஆவணங்கள் மற்றும் 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஸ்மார்ட்ஃபோன்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி. வேலுமணி மீதும், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சி. விஜயபாஸ்கர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கெனவே இரண்டு முறையும், சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ஒருமுறையும் ரெய்டு நடத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.