லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

தாம்பரம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, இன்று அதிகாலை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியே சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் வந்தபோது, லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இவ்விபத்தில் லாரிமீது அமர்ந்திருந்த ஆந்திராவை சேர்ந்த சிவா ரெட்டி, வரதராஜு ஆகிய இருவர்மீது கடப்பா கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். லாரி டிரைவர் லட்சுமணய்யா (36), அவரது மகன் வாசு, கிளினர் சுப்பா நாயுடு (50) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.