சேலம் அருகே, மாணவனை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி தற்போது 3 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவியை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவருபவர் சேர்ந்தவர் கார்த்திக்(18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற கார்த்திக் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் கார்த்திக் இருப்பதை கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த இளம்பெண்ணிடன் விசாரித்தபோது, அப்பெண்ணின் பெயர் சாந்தி (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், கார்த்திக்குடன் படித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் சாந்தியை காவல் நிலையம் கூட்டிவந்து விசாரித்தனர். அப்போது, இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்துள்ளனர். இதையடுத்து சாந்தி, திருமணம் செய்துகொண்டு வாழலாம் என ஆசை வார்த்தை கூறி கார்த்திக்கை அழைத்துள்ள்ளார்.
சாந்தியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட கார்த்திக், கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, சாந்தியுடன் சென்றதும், பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.
கார்த்திக் வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே, சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த சாந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாந்தி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.