லண்டன்: இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் ராணி கமிலா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரிட்டீஷ் குடும்ப வரலாற்று ஆசிரியரான லெவின் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ”குடும்ப உறுப்பினர்களை கைவிடக்கூடாது என்று கமிலா நம்புகிறார். ஹாரியும், மேகனும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கமிலா கருதுகிறார். இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்க நிகழ்வில் ஹாரியும், மேகனும் 10 நாட்கள் கலந்து கொண்டு துக்கத்தில் பங்கெடுத்தனர். அப்போதே அவர்கள் மீண்டும் பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இணைவார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் ராணி கமிலா தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரிட்டன் ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரிட்டன் ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார்.
ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, அதுவே மேகனுக்கும், ஹாரிக்கும் நடந்தது. ஒருகட்டத்தில் இதனை ஏற்றுக் கொள்ளாத ஹாரி – மேகன் இணை, இங்கிலாந்து அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இருவரின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.