துபாயில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்

துபாய்,

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது.

இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது.

ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. அவை இந்த காரை மேலே எழும்ப செய்வதற்கும், தரையில் கீழே இறங்குவதற்கும் உதவி புரியும்.

துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது. இதுபற்றி எக்ஸ்பெங் நிறுவனத்தின் பொது மேலாளர் மின்குவான் கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

இதற்காக துபாயை நாங்கள் முதலில் தேர்வு செய்தோம். ஏனெனில், உலகில் புதுமையான நகராக துபாய் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.