திடக்கழிவுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மிக முக்கியமான துறை. நகர்ப்புற குடிமை வசதிகளின் அனைத்து வளர்ச்சி மற்றும் பராமரிப்புகளை இத்துறை மேற்கொள்கிறது.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, துறை ரீதியாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின். “நமது மாநிலத்தில் 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தான் மாநிலத்தின் 50 விழுக்காடு மக்கள் தொகைக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றன. அவர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். நமது சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களை அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.” என்றார்.

மேலும், ஒவ்வொரு பகுதியிலும் திடக்கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசிடமிருந்து அனைத்து நிதிகளும் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுகிறது. குறிப்பாக பணி ஆணை வழங்கப்பட்டபின் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.” என்றும் உத்தரவிட்டார்.

அனைத்து அலுவலர்களும் தகவல் பலகைகளைப் பயன்படுத்தி பணிகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, பணியை எடுத்த ஒப்பந்தாரர்கள் விரைவாகவும், தரமாகவும் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.