கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் – 11 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழக அரசு சார்பில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை

தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தவை. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம், விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.

தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.

அழிந்து வரும் இந்த தேவாங்கு இனத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் அறிவிப்பு

இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததமிழக அரசு, “இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

கடவூர் தேவாங்கு சரணாலயம்

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 ஆயிரத்து 806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக ‘கடவூர் தேவாங்கு சரணா லயம்’ அமைத்து தமிழக அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது.

அழிந்துவரும் வன உயிரின பாதுகாப்புக்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அதன்படி பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம், விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயம், அகத்தியர் மலையானைகள் பாதுகாப்பகம், திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 13 ஈர நிலப்பகுதிகளை ராம்சார் சாசனப் பகுதிகள் பட்டியலில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது தேவாங்கு சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.