‘பாகுபலி 2’ வெற்றிப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தை ராஜ மௌலி இயக்கியிருந்தார். பல கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்த இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படம் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் இந்தியா சார்பில் ‘செல்லோ ஷோ’ படம் தேர்வானது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ மௌலியிடம் ‘ஆர்ஆர்ஆர்-2 ’ பாகத்திற்கான திட்டம் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆரம்ப கதை விவாதங்கள் நடந்து வருகின்றன அதன் தொடர்ச்சியை உருவாக்கும் திட்டமும் உள்ளது , “நானும் என் தந்தை விஜயேந்திர பிரசாத்தும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்று ராஜ மௌலி தெரிவித்துள்ளார்.