தமிழர்கள் காசிக்கு செல்ல வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் பக்தர்கள் வசதிக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து காசிக்கு செல்லும் ரயிலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் மக்களின் இதயங்களில் காசி  வாழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவை  நனவாக்க இந்த பயணம் நிறைவேற்றும்

நீண்ட காலமாக நம் நாட்டில் உள்ளதை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் முயற்சி இது. ஒரே பாரதம்தான் உன்னத பாரதம், அதற்கு இதுவே உதாரணமாக திகழ்கிறது. இந்தியாவை புரிந்து கொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காசிக்குப் போக வேண்டும், காசியில் இருந்து வருபவர்கள் இங்கே வர வேண்டும் அதுவே பாரதம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்  அதுவே  பாரதம். தமிழ்நாட்டிற்கும், வாரணாசிக்கும் கலாச்சார ரீதியாக, பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடர்பு மற்றும் ஒற்றுமை இருந்து வருகிறது. தூரம் காரணமாக நாம் அதை தற்காலிமாக மறந்துவிட்டோம். நிரந்தரமாக அதை மறக்கவில்லை. 

அதை மீட்கும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாச்சார தொடர்பாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” என்றார்.

அவரைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் முருகன் பேசுகையில், “தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலாச்சார நிகழ்ச்சிகள் அங்கு நடக்க உள்ளது. பண்பாடு, இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவை பற்றி கலை நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற உள்ளது. தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்தில் இருந்து 270க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

நவ.19ம் தேதி அன்று வாரணாசியில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எந்த ஓர் அரசியல் விமர்சனமும் கிடையாது. இது முழுமையாக தமிழகத்தின் கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காசிக்கும், நமக்கும் தொடர்பு உள்ளது. உன்னதமான தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.