தமிழகத்தில் அனுமதியின்றி எங்கும் சிலை வைக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் எங்கும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனுவில், ‘‘தியாகி இமானுவேல் சேகரன் சிலை வைக்க அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சிலை வைக்க முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த நபர்களின் சிலையை முறையான அனுமதியின்றி வைப்பது ஏற்புடையதல்ல. மனுதாரரின் கோரிக்கை மனு கலெக்டரிடம் நிலுவையில் உள்ளது. இதற்கு பல நடைமுறைகள் உள்ளன.

எனவே, முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை நவ. 19க்குள் அங்கிருந்து அகற்றி பாதுகாத்து வைக்க வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் விருதுநகர் கலெக்டரின் அனுமதி கிடைத்ததும் அந்த சிலையை அங்கு வைக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். இது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அனுமதி கேட்ட மனு நிலுவையில் இருக்கும்போது, நள்ளிரவில் அனுமதியின்றி சிலையை நிறுவி விட்டனர்.

ஏற்கனவே ஜாதிரீதியாக பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. குறிப்பிட்ட பகுதி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்டவை’’ என்றார். மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘பட்டா இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘அனுமதி கோரிய மனு இன்னும் ஏன் நிலுவையில் இருக்கிறது? இதனால், காவல் துறையினருக்கு தான் சிரமம் ஏற்படுகிறது’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘சிலை வைக்க அனுமதி கோரும் மனுதாரர் தரப்பு மனுவின் மீது அரசுத் தரப்பில் இறுதி முடிவெடுக்கும் வரை சிலையை திறக்க மாட்டோம் என மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் எங்கும் முறையான அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 24க்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.