தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், இந்தியர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கெடுபிடி காட்டினார்.
இதனால், இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிபர் பைடன் இந்தியர்களுக்கான விசா கெடுபிடிகளை தளர்த்தினார். மேலும் பல அயல்நாடுகளும் இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகளை நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை என்று சவுதி அரேபியா அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள சவுதி அரேபியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியர்கள் சவுதி அரேபியா செல்ல இனி காவல்துறையின் நன்னடத்தை சான்று தேவை இல்லை. இந்தியா – சவுதி இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நீடிக்கிறது. சவுதியில் 20 லட்சம் இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.