RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" – கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அவருடைய சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு அவர் சென்றிருந்த நிலையில், அங்கு நேற்று மதியம் நேரிட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

பல்வேறு முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.பி. சௌத்ரிக்கு, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு.

R B Choudary
R B Choudary

தமிழ் திரைத்துறையினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குநர் விக்ரமன் கண்கள் கலங்கியவாறு, ஆர்.பி. சௌத்ரி பற்றிப் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“40 வருஷத்துக்கு முன்னாடி, நம்மளும் ஒரு டைரக்டர் ஆகணும்னு கனவுகளோட மெட்ராஸுக்கு வந்து ரொம்பக் கஷ்டப்பட்டேன். அசிஸ்டண்ட் டைரக்டராகி, பிறகு அசோசியேட் டைரக்டராகி, படத்தை இயக்குவதற்குள் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.

பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கிச் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுப் போராடிட்டு இருந்தப்போ சௌத்ரி சார் எனக்கு வாய்ப்பளித்தார். சௌத்ரி சார்கிட்ட போய் கதை சொன்னேன்.

அவர் அதைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டார். அப்படி ஆரம்பிச்ச திரைப்படம்தான் ‘புது வசந்தம்’. இன்னைக்கு என்னுடைய வீட்டினுடைய பெயரும் புது வசந்தம்தான். இன்னைக்கு நான் நிம்மதியாகச் சாப்பிட்டுட்டு இருக்கிறதுக்குக் காரணமே அவர் போட்ட பிச்சைதான்.

Director Vikraman
Director Vikraman

அவர் இன்னைக்கு இல்லைன்றது எனக்கு ரொம்பக் கவலையான விஷயம். என்னன்னா 100 படம் எடுக்கணும் என்பது அவருடைய கனவு. நிச்சயமாக, 100-வது படத்தை சூப்பர் குட் நிறுவனம் எடுப்பாங்க.

ஆனா அதைப் பார்க்கறதுக்கு அவர் இல்லைங்கிறது உண்மையிலேயே ரொம்ப வேதனையா இருக்கு!” என்று கலங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.