திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் 22ம் தேதி தெப்ப விழா

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சிவப் பெருமான் நடனமாடிய ஐம்பெரும் சபைகளில் ரத்தினசபையாக சிறந்து விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  உற்சவர் தீர்த்த குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  காட்சி தரும் நிகழ்ச்சி நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக  தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு தெப்ப திருவிழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயா  தலைமையில் செய்து வருகின்றனர். இதையடுத்து தீர்த்தகுளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தெப்ப விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, ஏழுமலை, ராஜ் ஞானதி சிவசுப்பிரமணியம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.