”நான் வக்கீல் உள்ள விடுங்க” சிறப்பு தரிசனத்திற்கு மறுப்பு கூறிய ஊழியரை தாக்கிய வழக்கறிஞர்!

ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் சிறப்பு வழியில் அனுமதிக்காத பாதுகாப்பு ஊழியர் மீது தாக்குதல் நடத்த, இருவரும் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் காட்சிகள் கோவில் ஊழியர்களால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் தன்னை சிறப்பு வழியல் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இருவரும் தாக்கி கொள்ளும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ பாதுகாவர்கள் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
image
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில் ஒன்று என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரம் திருக்கோயில் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
image
இந்நிலையில் நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த ராம் பிரசாத் என்ற வழக்கறிஞர் அவருடைய தாயாருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்துள்ளார். ராம் பிரசாத் உள்ளூர் பொது மக்கள் செல்லும் சிறப்பு வரிசையில் தன்னையும் அனுமதிக்குமாறும், தான் ஒரு வழக்கறிஞர் எனவும் அடையாள அட்டையை காட்டியுள்ளார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள், சிறப்பு வழியில் தரிசனத்திற்கு செல்ல கட்டணம் செலுத்தி சிறப்பு டிக்கெட் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
image
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கறிஞர் ராம் பிரசாத் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்களை முதலில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த சக ஊழியர்கள் வழக்கறிஞரைத் தாக்கி உள்ளனர்.
image
இதனையடுத்து தகவலறிந்து வந்த மற்ற திருக்கோயில் ஊழியர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். இது குறித்த ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இருவரும் தாக்கி கொண்ட இடத்தில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீடியோவில் வழக்கறிஞர் முதலில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதும், பின்னர் ஊழியர்கள் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
image
இதனை தொடர்ந்து இருவரிடமும் புகார் மனுவை பெற்றுக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இருவரும் மாறி மாறி தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.