இலங்கையில் இருந்து 3 சிறுவர்கள் உள்பட 10 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நேற்று படகில் வந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேரை மரைன் போலீசார் மீட்டு மண்டபம் அழைத்து சென்றனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையால், வேலை வாய்ப்பு, வருவாய் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் தமிழர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து 2 பெண்கள், 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 இலங்கை தமிழர்கள் ஒரு படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் நுழைந்த படகோட்டிகள், தனுஷ்கோடிக்கும், முகுந்தராயர் சத்திரத்திற்கும் இடைப்பட்ட கடற்கரையில் இறக்கி விட்டு சென்று விட்டனர். நேற்று அதிகாலை அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், 10 பேரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.