பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பாஜக மாநில துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தச் சூழலில், சூர்யாவும், டெய்சி தங்கையாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனr. அப்போது பேசிய டெய்சி, “இந்த விவகாரத்தை எங்களுக்குள் பேசி விட்டுவிடுவோம் என்று முடிவெடுத்துவிட்டோம். பிரதமரின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு இந்தக் கட்சிக்கு வந்திருக்கிறோம். ஏதோ ஒரு கண் பட்ட மாதிரி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. அவர் என் தம்பி மாதிரி. ஆரம்பத்தில் அவர் என்னை அக்கா என்று அழைத்தார். நான் அவரை தம்பி என்றே அழைத்தேன். இனியும் நாங்கள் அப்படியே பயணிப்போம். ஒழுக்கமான கட்சி என்று பெயர் எடுத்திருக்கும்போது இது ஒரு சின்ன அசம்பாவிதம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து திருச்சி சூர்யா பேசுகையில், “அக்கா சொன்ன மாதிரி இது எங்களுக்குள் நடந்த தனிப்பட்ட உரையாடல். இன்று கனகசபாபதியை சந்தித்தோம். என்ன நடந்தது என்று எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுத்திருக்கிறோம். இந்த ஆடியோவை நாங்கள் இருவருமே வெளியில் கொடுக்கவில்லை.
எங்களுக்குள் இருந்த பிரச்னைகளை சுமூகமாக முடித்துக்கொள்கிறோம் என கூறினோம். கட்சி என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவேன் என கூறியிருக்கிறேன். பிரச்னைக்கு முன் நாங்கள் அக்கா – தம்பி என்றே இருந்தோம். கசப்பான சூழ்நிலையில் இப்படி நிகழ்ந்துவிட்டது. இதில் பெரிதாக பேசுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. நான் ஆபாசமாக பேசியது தவறுதான். நேரடியாக நான் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். சமரசம் ஆகிவிட்டோம்” என்றார்.