நாடு கடத்தும் விவகாரத்தில் நிரவ் மோடி மேல்முறையீடு| Dinamalar

லண்டன்,தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 51, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்தார்.

அதில், கடும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதால் தான் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு இரண்டு வார காலமே அவகாசம் உள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.