சென்னையில் திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மணலி காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து ராஜன் நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டாரிடம் போனில் பேசி விட்டு தூங்க சென்றுள்ளார்.
ஆனால் நேற்று காலையில் எழுந்த ராஜன், திடீரென வீட்டின் சமையல் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணலி போலீசார் ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.