தமிழ்நாட்டில் மீண்டும் வைகை புயல்… நாய் சேகர் வடிவேலு டிசம்பரில் ரிட்டர்ன்ஸ்

90களிலிருந்து அடுத்த 20 வருடங்கள் வடிவேலு இல்லாத படங்களே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியேக்கூட சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது  முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். அந்த அளவு வடிவேலு பிஸி. வடிவேலு யாருடன் நடித்தாலும் அந்த காம்போ அதிரிபுதிரி ஹிட்டடித்தது, ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது .இப்படி சென்றுகொண்டிருர்ந்த வடிவேலு கதாநாயகனாக அறிமுகமாகி மற்ற காமெடியன்களும் கதாநாயகனாக ஜெயிக்கலாம் என்ற விதையையும் போட்டார்.

இப்படி அசுர வேகத்தில் சுழற்றியடித்த வைகை புயல் அரசியலால் வலு குறைந்து ஒருகட்டத்தில் திரையில் காணாமலே போனது. இருந்தாலும் அனைத்து வீடுகளின் டிவிக்களிலும், அனைவரின் ஸ்மார்ட் ஃபோன்களிலும் வைகை புயலே வீசியது. அப்போதுதான் பலரும் புரிந்துகொண்டனர் வடிவேலு என்ற கலைஞனுக்கு அழிவே இல்லை என்று. அதன் பிறகு சில பிரச்னைகளால் ஒதுங்கியிருந்த வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். 

தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வாங்கிய சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு பாடியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.