
தயாரிப்பாளர் கே முரளிதரன் மறைவு
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன்(65) மாரடைப்பு காரணமாக கும்பகோணத்தில் காலமானார்.
லக்ஷமி மூவி மேக்கர்ஸ் சார்பில் சுவாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். ‛‛அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மச் சக்கரம், பிரியமுடன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம்'' உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஏராளமான படங்களை விநியோகமும் செய்துள்ளனர். கடைசியாக சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் படத்தை தயாரித்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார்.
சில ஆண்டுகளாக படங்கள் தயாரிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில் கும்பகோணத்தில் வசித்து வந்த முரளிதரன் மாரடைப்பு காரணமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் வட்டத்தில் குறிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.