நியூயார்க்: வன்முறைகளை தூண்டுவதற்கு எதிரான விதிகளை அவர் மீண்டும் மீறினார் என கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பாடகர் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர்தான் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறை மீறல் காரணமாக தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் ”தனக்கு ஹிட்லர் பிடிக்கும். நாஜிகள் பிடிக்கும்” என்று கன்யா கூறியிருந்தார். இந்த நிலையில் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்வியை நெட்டிசன் ஒருவர் எழுப்பி இருந்தார். அதற்கு ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் பதிலளிக்கும்போது, “ என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் மீண்டும் மீறினார்” என்று பதிலளித்தார். ஆனால் தற்போது எதற்காக கன்யாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
I tried my best. Despite that, he again violated our rule against incitement to violence. Account will be suspended.
— Elon Musk (@elonmusk) December 2, 2022