ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் ரூ.21,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக மு.க ஸ்டாலின் இருந்தபோது உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் சுய உதவி குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோன்று தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதேபோன்று இனிவரும் நாட்களில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கண்காட்சிகள் நடத்தப்படும். நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.