பாக். டிரோனில் கடத்த முயன்ற 25 கிலோ ஹெராயின், வெடிமருந்து பறிமுதல்: ஒரே வாரத்தில் 3வது முறை

சண்டிகர்: பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சுரிவாலா கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் டிரோன் வரும் சத்தத்தை கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உஷாரான வீரர்கள் டிரோன் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து டிரோன் திரும்ப சென்றுள்ளது. ஆனால் டிரோனில் இருந்து வீசப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதற்காக அந்த இடத்தில் அடையாளம் தெரியாத கும்பல் நடமாடியுள்ளது.

அவர்கள் மீதும் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்று வீரர்கள் சோதனை நடத்தியதில் 7.5கிலோ எடையுள்ள 9 ஹெராயின் பாக்கெட்டுக்கள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் துணியில் சுற்றி வீசப்பட்டு இருந்த மேலும் 7 பாக்கெட் ஹெராயின்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 17.5கிலோ ஹெராயின் இருந்தது. ஒரே வாரத்தில் எல்லையில் 3வது முறையாக டிரோன் மூலமாக போதைப்பொருட்கள் வீசப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.