பணம் வாங்கிவிட்டு நடிக்க மறுப்பு : யோகி பாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

எனி டைம் மனி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'தாதா. யோகிபாபு, நிதின் சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர். “இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. நான்கு காட்சிகளில் மட்டும் தான் நடித்திருக்கிறேன். நான் ஹீரோவாக நடித்திருப்பது போன்று விளம்பரம் செய்கிறார்கள்” என்று சமீபத்தில் யோகி பாபு புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து தாதா படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் பேசியதாவது: வரும் 9ம் தேதி 'தாதா' திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யோகிபாபு 4 சீனில் வருகிறாரா? 40 சீனில் வருகிறாரா என்று மக்களுக்கு சொல்லவேண்டும்.

யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்து கொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? வியாபார நேரத்தில் படம் வாங்க முன் வந்தவர்களுக்கு போன் செய்து அந்தப் படத்தை வாங்காதீர்கள் என்று கெடுதல் செய்தார்.

எனக்கு இன்னொரு படம் படம் நடித்துக் கொடுப்பதாக சொல்லி பணமும் வாங்கியிருக்கிறார். ஆனால் இப்போது அந்த பணத்தையும் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. தாதா வியாபாரத்தையும் கெடுத்தார். அதனால் எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.