திருப்பத்தூர் மாவட்டத்தில் படியில் பயணம் செய்த பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயில் ஒன்றில் படிக்கட்டில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடியாத்தம் வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.