ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.
அதன்படி, நடப்பாண்டு 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதன் முடிவுகள் அதே மாதம் 22-ம் தேதி வெளியானது. அதில், 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16 முதல் 25-ம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்றிரவு வெளியானது. தேர்வு எழுதிய 13 ஆயிரம் பேரில் 2,529 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 110 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.