ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னவரைச் சேர்ந்த சசிகலா (20) துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சசிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் – ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு வந்தார். துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்று கால் தவறி ரயிலுக்கும் நடைமேடையின் நடுவில் சசிகலா சிக்கிக் கொண்டார். அவரது கால் தண்டவாளத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தார்.
அங்கிருந்த பயணிகள், ரயில்வே மீட்புப் படையினர் கடும் முயற்சி செய்தும் வெளியே எடுக்க முடியாத நிலையில் நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் போராடிய பிறகு, சசிகலாவை வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக தயார் நிலையில் வரவழைக்கப்பட்டுருந்த ஆம்புலன்சில் ஷீலா நகரில் உள்ள கிம்ஸ் ஐகான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.