ஏழு மலைகள் ஏறி மாண்டஸ் அட்டகாசம்; திருப்பதியில் கொட்டி தீர்க்கும் கனமழை!

வங்க கடலில் நிலவி வரும் மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இடையே தமிழக எல்லையான மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலை வலுவிழந்து தற்போது, சென்னையில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 260 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும், மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று, இந்திய வானிலை மையம் மஞ்சள் அலெர்ட் விடுத்து உள்ளது.

ஏற்கனவே நேற்று விடிய விடிய சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் விட்டுவிட்டு பெய்த மழை அதிகாலை நேரம்போல் கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

அதே சமயம் இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (10.12.2022) 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கன மழை பெய்வதால் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.