மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (32), திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. மனைவி விசாலாட்சி. 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சொந்த ஊருக்கு வந்த கார்த்தி, கடந்த 12ம் தேதி நத்தம் பாப்பாபட்டி விலக்கில் பைக்கில் சென்றபோது, பஸ் மோதிய விபத்தில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கார்த்தி, நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்துள்ளார். நேற்று காலை அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதில் இதயம், நுரையீரல்கள் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 2 கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் விரைவாக எடுத்து சென்றும், மற்ற மருத்துவமனைகளுக்கு விமானம் மூலமும் கொண்டு செல்லப்பட்டன.
