சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 27,189 ஆவின் பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி போனஸ் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 30 பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையை நேரடியாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியார்களுக்கு 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 1325 பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2969 பணியாளர்களுக்கு ரூ.28.47 லட்சம் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22895 பணியாளர்களுக்கு ரூ.228.95 லட்சம் ஆக மொத்தம் 27,189 பணியாளர்களுக்கு ரூ.270 லட்சம் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளிக்கிழமையன்று 30 பணியாளர்களுக்கு நேரடியாக வழங்கினார்.
இதற்கான மொத்த செலவீனம் ரூ.270 லட்சம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 603 சங்கங்களில் உள்ள 98877 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு, சங்கங்கள் ஈட்டிய லாபத்திலிருந்து ரூ.1295.59 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.