தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி தமிழக அரசு மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தது. அதன்படி, கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது. அதனுடன் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களை பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனை காண்பித்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொண்டனர். மாநிலம் முழுவதும் 93 விழுக்காடுக்கும் மேலாக பொங்கல் டோக்கன் கொடுக்கப்பட்டு, பரிசு தொகுப்பும் விநியோகம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் சிலரால் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
டோக்கன் பெற்றும் பரிசு தொகுப்பு பெறாதவர்களும் உள்ளனர். இது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கேற்ப ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிக் கொள்ளலாம் என இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அப்டேட்டை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை