டிடிவி தினகரன் வரவேற்பு ஏற்பாடு: சீறி வந்த வாகனம்; சாலையை கடக்க முயன்ற பணியாளர் விபத்தில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின்  மகன் சரண் (18), சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இன்று எம்.ஜி.ஆர் பிறந்த நாள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றைய தினமே வருகை தந்து, ஆரோவில் பகுதியில் தங்கியுள்ளார். 

டிடிவி தினகரன்

எனவே, அவரை வரவேற்பதற்காக சென்னை – புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் பிள்ளைச்சாவடி முதல் கோட்டகுப்பம் வரையில் வாழை மரங்கள் கட்டப்பட்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இந்த பகுதி நேர பணியில், நேற்று இரவு சரண் ஈடுபட்டுள்ளார். பிள்ளைச்சாவடி கோயில் குளக்கரை அருகே சாலை ஓரமாக வாழை மரத்தை கட்டிவிட்டு, எதிர் திசையில் கட்டுவதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை – புதுவை நோக்கி சென்ற தனியார் ஹோட்டலின் ஆம்னி வேன் ஒன்று பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சரண், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்தில் உயிரிழப்பு

இது குறித்து சரணின் தந்தை கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், 279 மற்றும் 304 (a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிடிவி தினகரனை வரவேற்பதற்காக வாழைமரம் கட்டும் பணிக்கு சென்ற இளைஞர், வாகன விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.