அண்ணாமலைக்கு இசட் பாதுகாப்பு: ஆஃபரா, ஆப்பா? பின்னணி காரணம் என்ன?

அண்ணாமலைக்கு எதிராக பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு புகார்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். அண்ணாமலை தலைவராக பதவியேற்றதிலிருந்தே கட்சிக்குள் சீனியர் – ஜூனியர் மோதல் அதிகரித்ததாக பேச்சு எழுந்தது.

அண்ணாமலையின் ‘ஆடியோ, வீடியோ’ அரசியல் கட்சிக்குள்ளேயே பலரை முகம் சுளிக்கவைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் வரம்புமீறி நடந்து கொள்வது கட்சி மீது மக்கள் மத்தியில் மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்ற பேச்சும் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லிக்கும் சொல்லப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே அண்ணாமலைக்கு எதிராக டெல்லி சென்ற புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இம்முறையும் டெல்லி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று சில சீனியர்கள் தங்கள் வட்டாரத்தில் குமுறியுள்ளனர்.

அந்த சலிப்பை அதிகப்படுத்தும் விதமாக அண்ணாமலைக்கு இசட் பாதுகாப்பு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. இசட் பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ‘அரசியலில் களமிறங்கி மிகக் குறுகிய காலத்தில் எதிர்கட்சிகளை அலறவிடுவதால், அதிரடியான கருத்துக்களை துணிவுடன் எடுத்துரைப்பதால் அவரது பாதுகாப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது. அவரது பணிக்கான பாராட்டாக இதை பார்க்கலாம்’ என்று அண்ணாமலையின் விசுவாசிகள் கூறுகின்றனர்.

ஆனால் அண்ணாமலையோ வேறுமாதிரியாக சொல்கிறார். “எனக்கு வழங்கபட்ட இசட் பிரிவு பாதுகாப்பு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நுண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏன் எதற்காக வழங்கபட்டது என மத்திய அரசிடம் கேட்கபோவதில்லை. இதனால் சில தொல்லைகளும் உண்டு. மக்களை நெருங்கிச் சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும். எங்கு செல்கிறோம் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக பயணத் திட்டத்தை மாற்ற முடியாது” என்று அண்ணாமலை கூறினார்.

இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் யாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக இசட் பிரிவு பாதுகாப்பு தான் வழங்கப்படுகிறது.

இந்த வகை பாதுகாப்பு அண்ணாமலைக்கு கிடைத்ததன் பின்னணி குறித்து விசாரித்தோம். “அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு குறித்து என்ன சொன்னாலும் அவர் அதிகாரிகள் வட்டாரத்தில் இதற்காக லாபி செய்துள்ளார். அதனாலே இது கிடைத்துள்ளது. இருப்பினும் டெல்லி காரணம் இல்லாமல் இதற்கு சம்மதிக்காது. இதன் பிறகு அண்ணாமலையின் ஒவ்வொரு நகர்வும் டெல்லிக்கு தெரியவரும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.