பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி.!

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்பதால், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது.

இதையடுத்து, ‘மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்படும். இதில் அனைத்து சாதி, அதன் உபசாதிகள், மதம் போன்ற எல்லா விவரங்களும் இடம்பெற்றிருக்கும்’ என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதனை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. முதல் கட்ட கணக்கெடுப்பு கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரம் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மக்களின் சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன. இந்த பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன. இந்த பணிகளை வருகிற மே மாதத்திற்குள் முடிக்க அம்மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுக்களில் எந்த தகுதியும் இல்லை என்றும், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான சுதந்திரத்துடன் அவற்றை தள்ளுபடி செய்தது.

“இது ஒரு விளம்பர நல வழக்கு. எப்படிப்பட்ட ஜாதியினருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். மன்னிக்கவும், இதுபோன்ற உத்தரவுகளை எங்களால் வழங்க முடியாது, இந்த மனுக்களை ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் கூறினர்.

மகளிர் ஆணைய தலைவிக்கே பாலியல் தொல்லை; டெல்லி அவலம்.!

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு உட்பட மூன்று மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் தகுந்த தீர்வுக்காக பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது. “சட்டத்தில் தகுந்த தீர்வுகளைப் பெற அனைத்து மனுக்களும் சுதந்திரத்துடன் திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.