திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன்(65). இவர் வீட்டிற்கு அருகே வசிப்பவர் ராணி. அவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் அப்பகுதியில் உள்ளவர்களை பார்த்து குரைத்துக் கொண்டும், விரட்டிக் கொண்டும் இருந்துள்ளது. இதனால் ராயப்பன் நாயைக் கட்டி போட்டு வளர்க்கும் படி கூறியதில் இரு வீட்டாருக்கும் விரோதம் இருந்துள்ளது.
இதற்கிடையே ராயப்பன் ஊர் பெரியவர்களிடம், தனது வீட்டருகே நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் தனது பேரன் உள்ளிட்ட சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஊர் பெரியவர்களோ திருவிழா முடிந்ததும் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தனர்.
இந்நிலையில் ராயப்பன் நேற்று மாலை தனது விவசாய கிணற்றில் துணி அலசி விட்டு திரும்பியபோது அவரின் பேரன்களிடம், `பக்கத்து வீட்டு நாய் வந்ததால் கடிக்கும்’ என கூறி குச்சி எடுத்து வருமாறு கூறினார். இதைக் கேட்ட எலெக்ட்ரிஷன் வேலை பார்த்து வரும் ராணியின் மகன்களாக வின்சென்ட்(22) மற்றும் டேனியல்(20) தனது தாயாருடன் சேர்ந்து, `குழந்தை போல வளர்க்கும் எங்கள் நாயை நாய் என்கிறாயா?’ எனக் கூறி பிரச்னை செய்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து வின்சென்ட் கட்டையால் முதியவரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதையடுத்து டேனியல் வீட்டில் வைத்திருந்த சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு முதியவரின் நெஞ்சில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்த தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து ராயப்பனின் உடலை கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராணி, வின்சென்ட், டேனியல்ஆகியோரை கைது செய்து ரிமாண்ட் செய்தனர். நாயை நாய் என்று திட்டிய பிரச்னைக்காக ஒரு உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.