சமீபத்தில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். மாணவியை கவனித்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று அவரை காப்பாற்றி, வெளியே கொண்டு வந்து, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த சிறுமியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விசாரணை நடந்தது.
அதில், பயிற்சி மையம் ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி கல்வி கற்க சென்றுள்ளார். இதில், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். அதனை வாங்கி குடித்ததில் சிறுமி மயக்கமடைந்து உள்ளார். இதன்பின்னர், பயிற்சி மையத்தின் ஆசிரியர் மற்றும் அந்த மையத்தில் உள்ள இளைஞர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவும் எடுத்து உள்ளனர்.
இதன்பின், இதனை காட்டியே, சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்து உள்ளனர். இது பல வாரங்களாக நடந்துள்ளது. இதேபோன்று 12-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நடந்து உள்ளது. ஆனால், அச்சம், அவதூறு ஏற்படும் என பயந்து வெளியே கூறாமல் இருந்து விட்டனர். இது குற்றவாளிகளுக்கு சாதகம் ஏற்பட்டு விட்டது என கூறி அழுதுள்ளார்.
இதுபற்றி அறிந்ததும், சிறுமியின் பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால், போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என கூறப்படுகிறது. குளிர்பானங்களை ஏன் வாங்கி குடிக்கின்றாய்? என கேட்டு போலீசார் அந்த மாணவியை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர், உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர்.