ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியானது. பாகுபலி இரண்டு பார்டுகளிலும் இருந்த அதே பிரம்மிப்பை இந்தப் படத்திலும் காண்பித்திருந்தார் இயக்குநர் ராஜமௌலி. கொரோனா காரணமாக ரிலீஸ் செய்வதில் தள்ளிப்போய் கொண்டே இருந்த இந்தப் படம், கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. வட இந்தியா, தென் இந்தியா என நாடு முழுவதும் சுழன்றடித்த ஆர்ஆர்ஆர் அலை, அனைத்து இடங்களிலும் பாக்ஸ் ஆஃபீஸில் கொடி கட்டிப் பறந்தது. இந்தப் படத்தின் வசூலைப் பார்த்து பாலிவுட் படங்களே தங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டன. அந்தளவுக்கு வசூலை வாரிக் குவித்த ஆர்ஆர்ஆர், சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது.
இந்திய சினிமாவிலேயே ஆயிரம் கோடி ரூபாய் எட்டிய படங்கள் என்றால் ராஜமௌலியின் பாகுபலி மற்றும் தங்கல் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. அந்த லிஸ்டில் மூன்றாவதாக தன் பெயரையும் இணைத்துக் கொண்டது ஆர்ஆர்ஆர். அந்தளவுக்கு ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து விருது விழாவிலும் ஆர்ஆர்ஆர் படங்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் குவிந்தன. அண்மையில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக கோல்டன் குளோப் விருதை பெற்றார் படத்தின் இசையமைப்பாளர் கீராவாணி. அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் இயக்குநர்களிடமும் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தது. இப்படி சர்வதேச அளவில் புகழை பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றொரு சாதனையை படைத்திருக்கிறது.
— rajamouli ss (@ssrajamouli) January 28, 2023
இதுவரை ஜப்பானில் திரையிடப்பட்ட இந்திய படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனைக்கு சொந்தமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து படத்தின் வசூலை இப்போது முறியடித்திருக்கிறது ஆர்ஆர்ஆர். அங்கு 100 நாள் ஓடியிருக்கும் இந்தப் படம் இதுவரை ஜப்பானில் அதிக கலெக்ஷனை வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனால் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மகிழ்ச்சியில் உள்ளார். அவர், இந்த சாதனையை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.