கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி மன்ற செயலர், தலைவி அரெஸ்ட்..!

காஞ்சிபுரம் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவியாக வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரிடம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த நிலையில், அனுமதி கொடுக்க வேண்டுமென்றால், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென கிருஷ்ணமூர்த்தியை, வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஊராட்சி செயலாளராக உள்ள புவனா என்பவரும் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ‘போலீசாரின்அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலர் புவனா என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், புவனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவி வேண்டா சுந்தரமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.