விக்கிரவாண்டி அருகே நாடக காதலனால் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த தரணி (வயது 19) விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த இன்று காலை மாணவி தரணி தனது வீட்டின் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தபோது, மறைந்திருந்த இளைஞர் ஒருவர் மாணவி தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி தரணியின் மரண ஓலத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
அங்கு ரத்தவெள்ளத்தில் தரணி இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்துவந்த போலீசார் தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியை கொலை செய்த கணேஷ் என்ற 25 வயது இளைஞரை சற்றுமுன் போலீசார் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணைப்படி, கஞ்சா பழக்கத்திற்கு ஆளான கணேஷ், மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும், மாணவி பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.