700 கோடி முதலீடு : சோதனை வளையத்தில் சிக்கிய 'புஷ்பா' குழு ?

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.

கடந்த வாரம் அந்நிறுவனத்திலும், படத்தின் இயக்குனரான சுகுமார் இல்லத்திலும் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. ஐந்து நாட்களுக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. சோதனையில் முடிவில் சில சிறிய தவறுகள் நடந்துள்ளதாகவும், அவற்றைச் சரி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், டோலிவுட் வட்டாரங்களில் வேறு விதமான செய்தி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து பெற்ற சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு பற்றி அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறதாம். அது பற்றிய விசாரணை முடிவுகள் வரும் வரை 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பை நடத்த வாய்ப்பில்லையாம். எனவே, அல்லு அர்ஜுன் அவரது அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தையை நடத்த மும்பை சென்றுவிட்டாராம்.

'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த வருட மத்தியிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக வேண்டியது. ஆனால், மிகவும் தாமதமாக அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் 'புஷ்பா 2' சோதனை விவகாரம்தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.