மின்னல் வேகத்தில் சென்ற ரேபிடோ பைக்.. தூக்கி எறியப்பட்ட இளம்பெண்.. பிறந்தநாளே இறந்தநாளான சோகம்!

சென்னை:
சென்னையில் ரேபிடோ பைக் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்தநாள் அன்றே அப்பண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் ரேபிடோ பைக் டாக்சி என்பது பரவலான ஒன்றாக மாறிவிட்டது. ஆட்டோ, காரை ஒப்பிடுகையில் இதில் கட்டணம் குறைவு என்பதாலும், விரைவாக செல்ல முடியும் என்பதாலும் ரேபிடோ பைக் டாக்சியை பெரும்பாலோனர் தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

அதே சமயத்தில், ரேபிடோ பைக் டாக்சி இயங்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. பைக் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் ரேபிடோவில் இணைந்து, பைக் டாக்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதால் இதில் எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், விதிகளை மீறியே ரேபிடோ பைக் டாக்சிகள் இயங்கி வருகின்றன.

வியாசர்பாடி பெண்:
இந்நிலையில் தான், சென்னையில் ரேபிடோ பைக் டாக்சி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சேவிகா (34). தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, நேற்று இரவு தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதிவேகம்:
இரவு அவர்களின் வீட்டில் தங்கியிருந்த சேவிகா, இன்று அதிகாலை வியாசர்பாடி செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அதன்படி, பைக் டாக்சியில் அவர் சென்றுள்ளார். ஆனந்தன் என்பவர் பைக்கை ஓட்டி இருக்கிறார். தி நகரை தாண்டி அண்ணாசாலைக்கு வந்ததும் அவர் பைக்கை அதிவேகமாக ஓட்ட தொடங்கினார்.

லாரி மோதியது:
இந்நிலையில், அண்ணாசாலை காமராஜர் அரங்கம் அருகே சென்ற போது, அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட சேவிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் ஆனந்தனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள், சேவிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

போலீஸ் வழக்கு பதிவு:
ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பைக்கை இடித்துவிட்டு நிற்காமல் செய்த லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். கடந்த வாரம் பெங்களூரில், ரேபிடோ பைக் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓடும் பைக்கில் இருந்து பெண் குதித்து படுகாயமடைந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.