சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தாததால் பதிவு மறுக்கப்பட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிமன்றம் நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு, ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “காருக்கான நுழைவு வரியை ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.