'பிரிவு' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பவன் கல்யாண்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். அது மட்டுமல்ல ஜனசேனா கட்சியின் தலைவராகவும் இருந்து ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தமிழ் இயக்குனரான சமுத்திரக்கனியின் இயக்கத்தில் 'ப்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த வாரம் வெளியான அப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே, பவன் கல்யாணின் அண்ணன் நாகபாபுவின் மகன் வருண்தேஜ் திருமண நிச்சயதார்த்தத்திலும், மூத்த அண்ணன் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிலும் பவன் கல்யாணின் மனைவி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஸ்னவா கலந்து கொள்ளவில்லை. அதை வைத்து பவன் கல்யாணும், அன்னாவும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அந்த வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவிட்டுள்ளது. பவன் கல்யாண் 'வராஹி விஜய யாத்ரா'வை வெற்றிகரமாக முடித்ததை முன்னிட்டு நடந்த பூஜையில் பவன் கல்யாண், அவரது மனைவி அன்னா கொன்னிடலா ஆகியோர் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னாவை பிரிந்தார் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.